சென்னை, ஜூன் 2–
பொது இடங்களில் புகை பிடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 4.60 லட்சம் பேரிடமிருந்து 8 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:–
தற்போது, குழந்தைகள், சிறார்களை குறிவைத்து, புகையிலை பொருட்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன. அவற்றை தடுக்கும் வகையில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. புகையிலை பொருட்களை குழந்தைகளுக்கு விற்பனை செய்தல், பொது இடங்களில் புகை பிடித்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவோரிடம், 200 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதன்படி, கடந்த 10 ஆண்டுகளில், 4.60 லட்சம் பேரிட மிருந்து, 7.97 கோடி ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில், இச்சட்டத்தின்படி நடவடிக்கையை தீவிரப்படுத்த உள்ளோம். தொடர்ந்து தவறு செய்பவர்கள் மீது, குற்றவியல் வழக்குப்பதிவு செய்து, ஓராண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளது என்றார்.