அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை
சென்னை, ஜன.5-–
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 17-ந் தேதியும் விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வருகிற 14-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 15, 16 மற்றும் 18, 19 ஆகியவை அரசு விடுமுறை நாட்களாகும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடுவார்கள்.
அதற்கு இடைபட்ட நாளான 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அந்த கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள்.
அந்த வகையில், 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இதன்மூலமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருகிற 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.