செய்திகள்

பொங்கல் நாட்களில் சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா’ கலைநிகழ்ச்சி

Makkal Kural Official

13-–ந் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

சென்னை, ஜன.3-–

‘சென்னை சங்கமம்- – நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

‘சென்னை சங்கமம் -நம்ம ஊரு திருவிழா’ என்ற பெயரில் தமிழர்களின் பண்பாட்டு பெருமைகளை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா–-2025’ கலை நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், முதலமைச்சரின் செயலாளர் எம்.எஸ்.சண்முகம், சுற்றுலாத் துறை ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அரசு அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் கவிதா ராமு உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-–

சென்னை கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடலில் ‘சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’ கலை நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13-–ந் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னணி கலைஞர்களுடன் 200 கிராமிய கலைஞர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் இசை, நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனைத்தொடர்ந்து பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சென்னை இசைக்கல்லூரி வளாகம், திருவல்லிக்கேணி பாரத சாரண-சாரணியர் திடல், கிண்டி கத்திபாரா வளாகம், சைதாப்பேட்டை மாநகராட்சி விளையாட்டுத்திடல்,

தியாகராயநகர் நடேசன் பூங்கா, நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானம், எழும்பூர் அருங்காட்சியகம், கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திடல், ராயபுரம் ராபின்சன் பூங்கா, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா, அண்ணாநகர் கோபுர பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, கே.கே.நகர் சிவன் பூங்கா, வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், கொளத்தூர் மாநகராட்சித் திடல், அம்பத்தூர் எஸ்.வி. விளையாட்டுத் திடல் ஆகிய 18 இடங்களில் 14–-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டு உள்ள 1,500-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், இறை நடனம், தப்பாட்டம், துடும்பாட்டம், பம்பையாட்டம், கைசிலம்பாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், சேவையாட்டம், கோலாட்டம், ஜிக்காட்டம், ஜிம்பளா மேளம், பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், வில்லுபாட்டு, கணியன் கூத்து, தெருக்கூத்து, பாவைக்கூத்து, தோல்பாவைக்கூத்து, நாடகம், கிராமிய ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் சென்னையின் புகழ்பெற்ற செவ்வியல் மற்றும் மெல்லிசை கலைஞர்கள் ஆகியோரும் கலை நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார்கள்.

இவற்றுடன் மராட்டியா லாவணி, ராஜஸ்தான் கூமர் நடனம், மேற்கு வங்காளம் துர்சி நிருத்தியா, கோவா விளக்கு நடனம், மிசோராம் மூங்கில் நடனம் ஆகியவைகளும் நடைபெற உள்ளன. இவ்விழா நடைபெறும் நாட்களில் அனைத்து இடங்களிலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகள் இடம்பெறும் வகையில் உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *