செய்திகள்

பொங்கல் தொகுப்புடன் ரூ.2000: விசாரணைக்கு ஏற்க மறுத்தது ஐகோர்ட்

Makkal Kural Official

சென்னை, ஜன. 17–

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த சென்னை ஐகோர்ட், இதுசம்பந்தமாக அரசுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என திட்டவட்டமாக மறுத்துள்ளது.

பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியது. இந்த பரிசு தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்க பணம் வழங்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து, தகுந்த நிவாரணம் அளிக்க உத்தரவிட வேண்டும் என அண்மையில் தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது. ஆனால், தலைமை நீதிபதி ஸ்ரீராம், அவசர வழக்காக விசாரிக்க மறுத்தார்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ரேஷன் கடைகள் மூலம் இதற்கான டோக்கன் கடந்த ஜனவரி 3 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு 9–ந் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வில் வழக்கறிஞர் மோகன்தாஸ் இன்று முறையிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஏழை மக்களுக்கு ரொக்க பணம் வழங்கினால் மகிழ்ச்சி தான். ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு என்றும், ரொக்கப் பணம் ரூ. 2000 வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி, வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *