காஞ்சிபுரம், செப். 18–
பைக் வீலிங் செய்ததால் விபத்து ஏற்பட்டதையொட்டி பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன் ‘மஞ்சள் வீரன்’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குனர் செல்அம் இயக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில், நேற்று டிடிஎப் வாசன் பைக் வீலிங் செய்தபோது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் ஊராட்சி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அவர் வீலிங் செய்தபோது பைக் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் தூக்கி விசப்பட்ட அவர், பலத்த காயமடைந்தார். மேலும் கை எலும்பு உடைந்ததால் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு பிளேட் வைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், விபத்தில் சிக்கிய டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.