தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னை, டிச.20-
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்கள் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பதற்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 13 சிப்காட் தொழிற்பூங்காக்களில் 63 குழந்தை காப்பகங்கள் பல்வேறு தொழிற்சாலைகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் மேலும் புதிதாக 17 குழந்தை காப்பகங்கள் அமைக்க தமிழக அரசு கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி தற்போது புதிதாக 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தை காப்பகங்கள் அமைக்கப்படுகின்றன. இதன் மூலம் 3 லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள்.
இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் சென்னையில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்ந்த பெண்கள் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளது. இந்த திட்டத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் உருவாக்கும்.
சென்னையில் உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பு இந்த காப்பகங்களை செயல்படுத்தி பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ளும். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவன மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (சென்னை) பெண்கள் பிரிவின் தலைவர் திவ்யா அபிஷேக் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டனர்.
பின்னர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:-
தமிழ்நாடு அரசு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நலன் ஆகியவற்றை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இது இந்திய தொழில்துறை வளர்ச்சிக்கு, தமிழ்நாட்டுப் பெண் தொழிலாளர்களின் விலை மதிப்பற்ற பங்களிப்பைப் பறைசாற்றுகிறது.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம், 17 தொழிற் பூங்காக்களில் குழந்தைகள் காப்பக வசதியை அறிமுகப்படுத்துவது உழைக்கும் பெண்களின் குறிப்பாக, தாய்மார்களின் தனிப்பட்ட பணிச்சுமையைக் குறைப்பதற்கான மற்றொரு சிறப்பான திட்டமாகும். திராவிட மாடல் அரசின் ‘‘எல்லோர்க்கும் எல்லாம்’’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அனைவரையும் உள்ளடக்கிய தொழில் சூழலை உருவாக்குவது ஒரு புதிய மைல்கல்லாக அமையும் என்று நான் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் செயல் இயக்குனர் சிநேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.