செய்திகள்

பெண்கள் தொடர்பான புகார்கள் மீது அரசு தீவிரமாக செயல்படுகிறது

Makkal Kural Official

எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் சிவசங்கர் பதில்

சென்னை, ஜன.28–-

பெண்கள் தொடர்பான புகார்கள் மீது தி.மு.க. அரசு தீவிரமாக செயல்படுகிறது என எடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–-

பெரம்பூர் சம்பவம் தொடர்பாக புகார் பெறப்பட்ட உடனே தமிழ்நாடு போலீஸ் துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளது. அண்ணா தி.மு.க. ஆட்சியை போன்று அலட்சியமாக இல்லாமல் பெண்கள் தொடர்பான புகார்கள் மீது போலீஸ் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

பெரம்பூர் சம்பவத்தில் விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியிலும் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் இருக்கும் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல அரசை குறை கூறி உள்ளார். ‘சார்’களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான எடப்பாடி பழனிசாமிக்கு அண்ணா தி.மு.க.வின் ‘சார்’களை நினைவிருக்கிறதா?

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்த 103-வது வட்ட செயலாளர் சுதாகர் யார்? என்பதை மறந்து விட்டீர்களா? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அண்ணா தி.மு.க.வின் பொள்ளாச்சி நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம் ‘யார்’ என்பதை மறந்துவிட்டீர்களா?

மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி யார் என்பது தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அண்ணா தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் யார்? என்பது மறந்து போனதா?

நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் அண்ணா தி.மு.க. ‘சார்’களை மறக்க மாட்டார்கள். பாலியல் குற்றவாளிகளின் புகழிடமாக அண்ணா தி.மு.க.வை வைத்துக்கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *