செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள்

Makkal Kural Official

சட்டசபையில் ஸ்டாலின் அறிவிப்பு

இந்த ஆண்டு 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும்

‘தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக்குவேன்’

சென்னை, ஜன.11–

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்க 7 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.

அப்போது எதிர்க்கட்சிகள் அளித்த புகார்கள், குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கும் பதிலளித்து பேசினார்.

பல்வேறு அறிவிப்புகளையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:–

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை விசாரிக்க மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புற பகுதிகளில் ஏழு தனிச் சிறப்பு நீதிமன்றங்கள் புதிதாக அமைக்கப்படும்.

இத்தகைய குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க, மாவட்டந்தோறும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில சிறப்புக் குழு அமைக்கப்படும். பாலியல் குற்றங்களில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கின்ற கைதிகளுக்கு, முன்விடுதலை கிடைக்காதவகையில தமிழ்நாடு சிறைத் துறை விதிகள் திருத்தம் செய்யப்படும்.

புதிய மாநகராட்சிகள்

மாநிலத்தின் நகர்ப்புர உள்ளாட்சி, உள்ளாட்சி அமைப்புகளை ஒட்டியுள்ள கிராமங்களும் மிக விரைவாக வளர்ச்சி அடைந்து வருவதால் பல்வேறு மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி அமைப்புகளின் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் உதயமாகி இருக்கின்றன.

இந்த நகரங்களில் வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும்வகையில் இந்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலுள்ள சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், பேரூராட்சிகளில் புதிய சாலைகளை அமைத்திடவும், பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைத்து புதுப்பித்திடவும், குடிநீர் மற்றும் பாதாள சாக்கடைகளால் சேதப்பட்டுள்ள சாலைகளை சீரமைத்திடவும் வரும் ஆண்டுகளில் 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நகர்ப்புர சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் .

பல்வேறு கோரிக்கைகளை ஏற்று மக்களுக்கான போக்குவரத்து வசதியை மேம்படுத்த வரும் ஆண்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு விரைந்து கொண்டு வரப்படும்.

இந்த அரசு பதவி ஏற்றபின் ஏழை எளிய பட்டியலின மக்களுக்கு 2 லட்சத்து 67 ஆயிரத்து 437 மனைகளை வரன்முறைப்படுத்தி இ–-பட்டா வழங்கப்பட்டிருக்கின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும்விதமாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சீர்செய்தும் புதியதாக நிலங்களை கையகப்படுத்தியும் ஒரு லட்சம் வீட்டுமனைப் பட்டாக்கள் அவர்களுக்கு வழங்கப்படும்.

எங்களுக்கு வாக்களித்த மக்களும், எங்களுக்கு வாக்களிக்காத மக்களாக இருந்தாலும், எங்கள் மனச்சாட்சிதான் நீதிபதிகள். மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எங்கள் மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமல், முழு உழைப்பை தந்து, நாங்கள் ஆட்சி நடத்திக்கொண்டு வருகிறோம். அடுத்து அமையப் போகும் அரசும், தி.மு.க. அரசு தான். அதில் எங்களுக்கு இம்மி அளவும் சந்தேகமில்லை; தமிழ்நாட்டு மக்களுக்கும் சந்தேகமில்லை.

‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ தமிழ்நாட்டை மேம்படுத்தும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாக இருப்பவன். இதைத்தவிர எனக்கு வேறு பணிகள் இல்லை. ‘என்னுடைய சிந்தனையும் செயலும் தமிழ்நாடு, தமிழ்நாடு என்றும் தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையுமே சுத்தி, சுத்தி வருகிறது.

நான் பிறந்தப்போது ஸ்டாலின் என்று பெயர் சூட்டுன கலைஞர், வளர்ந்த போது ‘உழைப்பு’னுதான் பெயர் சூட்டினார். அப்படி உழைக்கக் கத்துக் கொடுத்தவரும் அவர்தான். “ஓய்வெடுத்து உழையுங்கள்” என்று ஆலோசனை சொல்கிறவர்களிடம், ‘ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவரின் மகன் நான்’ என்று சொல்லுவேன். “தலைவர் பாதையே தனிப்பாதை, கலைஞர் பாதையே வெற்றிப்பாதை” என்று செயல்பட்டு வருகின்றவன் நான்.

முன்னோடி மாநிலமாக்குவேன்

பெரியார், அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்கள் உருவாக்கிக் கொடுத்த கொள்கைகளை கலைஞர் வழிநின்று காப்பேன். கலைஞர் அடித்தளமிட்ட நவீனத் தமிழ்நாட்டை இந்தியாவில் முதன்மை மாநிலமாக, முன்னோடி மாநிலமாக உயர்த்திக் காட்டுவேன். மக்களாட்சிக் காலத்தில் திராவிட மாடல் ஆட்சிதான் பொற்கால ஆட்சி என்று வரலாறு பதிவு செய்யும். இந்தப் பொற்கால ஆட்சியே காலம் காலமாகத் தொடரும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *