டெல்லி, ஜன. 23–
பெட்ரோல் விலை விரைவில் குறையும் என்று இந்திய ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தை கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணையிக்கப்படுகிறது என்று சொல்லப்பட்டாலும், பாரதீய ஜனதா அரசின் விருப்பத்தையே எண்ணெய் நிறுவனங்கள் நிறைவேற்றுகிறார்கள் என்ற விமர்சனமும் முன்வைக்கப் படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் அதன் விலையை மாற்றியமைத்துக் கொள்ள அரசு அனுமதித்துள்ளது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்து வருகின்றன. இடைஇடையே வந்த 5 மாநில தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், ஒரு ஆண்டாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் உள்ளது.
அமைச்சர் நம்பிக்கை
அதன்படி சென்னையை பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்ககும், லிட்டர் டீசல் ரூ. 94.24க்குவிற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் விலை விரைவில் குறையும் என இந்திய ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், பெட்ரோல் மூலம் லிட்டருக்கு ரூ.10 வரை லாபம் பார்க்கும் எண்ணெய் நிறுவனங்கள், டீசலில் நஷ்டம் அடைந்து வருகின்றன. கடந்த ஆண்டு சர்வதேச அளவில் விலை உயர்ந்தாலும் எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட்டன என்று அவர் கூறினார்.