டெல்லி, டிச. 15–
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. டிசம்பர் 29 வரை 17 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இதில் நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. அந்தவகையில், இந்திய – சீன எல்லை பிரச்னை குறித்தும் விவாதிக்க வேண்டும். ஒன்றிய அரசு விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
திமுக ளேள்வி
இந்நிலையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசும்போது, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்துள்ளது. இந்நிலையில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்க வேண்டும் என புள்ளி விரவரங்களுடன் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தினார். சர்வதேச சந்தையில் ஒரு ஆண்டுக்கு மேலாக கச்சா எண்ணெய் விலை குறைந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? எனவும் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் விலை உயர்வு குறித்து இந்திய ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கம் அளித்தார். ஆனால், அவர் அளித்த விளங்கங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை என்று கூறி மக்களவையில் இருந்து, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.