சென்னை, ஜன.28-
‘பெஞ்ஜல்’ புயலுக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்பு பணிக்கான சேத மதிப்பீடு குழுவுடன் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று ஆலோசனை செய்து அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
‘பெஞ்ஜல்’ புயலின் காரணமாக சேதம் அடைந்த கட்டமைப்புகளை நிரந்தரமாக சீரமைக்க பேரிடருக்கு பிந்தைய சேத மதிப்பீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 வல்லுனர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பல்துறை அலுவலர்களைக் கொண்ட ஒரு குழுவை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைத்தது.
இதற்கிடையே சென்னை வந்த வல்லுனர் குழு, தமிழ்நாடு அரசின் பல்துறை அலுவலர்களுக்கு பேரிடருக்கு பிந்தைய சேத மதிப்பீடு ஆய்வு குறித்து பயிற்சி அளித்தது. தொடர்ந்து இக்குழு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் புயலால் ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்கும் நோக்கில் நேரில் சென்று மதிப்பீடு செய்தது.
ஏற்கனவே, புயலின் காரணமாக ஏற்பட்ட தற்காலிக சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய அரசின் பல்துறை குழு கடந்த டிசம்பர் மாதம் ஆய்வு மேற்கொண்டது. சேதங்களை தற்காலிகமாக சீரமைக்கவும், நிவாரணம் வழங்கவும் ரூ.3 ஆயிரத்து 104 கோடியும், நிரந்தர சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.3 ஆயிரத்து 681 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசால் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், பேரிடருக்கு பிந்தைய நிரந்தர சீரமைப்பு பணிக்கான சேத மதிப்பீடு குழுவுடன் சென்னை, எழிலகத்தில் கலந்தாலோசித்தார். அப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 13 வல்லுனர்களையும், தமிழ்நாடு அரசின் பல்துறை அலுவலர்களையும் அறிக்கையை விரைந்து சமர்ப்பிக்க உத்தரவிட்டார்
தமிழ்நாடு அரசு, இந்த அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிப்பதன் மூலம் புயலால் ஏற்பட்ட சேதங்களை நிரந்தரமாக சீரமைக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு பெறவும், இதன் மூலம் பேரிடரினால் சேதம் அடைந்துள்ள பல்வேறு உள்கட்டமைப்புகளை தற்காலிக தொழில்நுட்பங்களை உட்படுத்தி சிறந்த முறையில் மீட்டுருவாக்கம் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
கூட்டத்தில் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக கமிஷனர் ராஜேஷ் லக்கானி, பேரிடர் மேலாண்மை இயக்குனர் வ.மோகனச்சந்திரன் மற்றும் பல்துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டனர்.