சென்னை, ஏப். 27–
மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் பூந்தமல்லி – போரூர் இடையே நாளை நடைபெறுகிறது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் முக்கிய வழித்தடமான கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பாலப் பாதையாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் பூந்தமல்லி – போரூர் இடையே பல இடங்களில் ரெயில் பாதை அமைக்கும் பணி, பொறியியல் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.
இந்த வழித்தடத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி முதல்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பூந்தமல்லி– போரூர் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட சோதனை ஓட்டம் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்நிலையில், பூந்தமல்லி முதல் போரூர் வரை நாளை அடுத்தகட்ட சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை மக்கள் பயன்பாட்டுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.