செய்திகள்

புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம்: தியேட்டர் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

Makkal Kural Official

ஐதராபாத், டிச. 9–

புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளர், மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படம் கடந்த 5-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இப்படத்துக்கு தெலுங்கானா அரசு அனுமதி பெற்று திரையிடப்பட்ட அதிகாலை சிறப்பு காட்சியை காண ஆயிரக்கணக்கானோர் தியேட்டர்களில் திரண்டனர்.

ஐதராபாத்தில் உள்ள சந்தியா 70 எம்எம் தியேட்டரில் பிரிமியர் காட்சி திரையிட்ட போது கூட்ட நெரிசலில் 39 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்தார். அவருடைய 13 வயது மகன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த மரணத்தைத் தொடர்ந்து சிக்கடபள்ளி போலீசார் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் மீது வழக்கு பதிவு செய்தனர். அந்த பிரிமியர் காட்சியில் அல்லு அர்ஜுன் படம் பார்க்க வந்த போதுதான் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர் அங்கு வருவது குறித்து காவல் துறைக்கு தியேட்டர் நிர்வாகம் எந்தவிதத் தகவலும் தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அவ்வளவு கூட்டம் கூடுவதற்கு எந்தவித பாதுகாப்பும் செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று சந்தியா தியேட்டரின் உரிமையாளர், மேலாளர், பாதுகாப்பு மேலாளர் ஆகியோரை சிக்கடபள்ளி போலீசார் கைது செய்தனர்.

உயிரிழந்த பெண்ணுக்கு அல்லு அர்ஜுன் 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்திருந்தார். அல்லு அர்ஜுன் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதால் அவரும் கைது செய்யப்படுவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.

மேலும், இனிமேல் எந்த படத்துக்கும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என்று தெலுங்கானா அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *