புனே, டிச. 23–
புனேவில் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது தாறுமாறாக ஓடிய லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர். இன்று அதிகாலை 12.30 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.
புனேவின் கேஷ்னந்த் பாதா பகுதியில் ஒரு நடைபாதையில் 12 தொழிலாளர்கள் படுத்து உறங்கியுள்ளனர். அப்போது அதிகாலையில் தாறுமாறாக ஓடிய லாரி ஒன்று நடைபாதையில் ஏறியுள்ளது. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் வைபவி பவார் ( 1 வயது), வைபவ் பவார் ( 2 வயது), விஷால் பவார் (22) என அடையாளம் தெரியவந்துள்ளது. காயமடைந்துள்ள 6 பேரும் சசூன் பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. லாரியை இயக்கிய 26 வயதான சங்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். போலீசார் விசாரணையில் டிரைவர் குடிப்போதையில் இருந்தது தான் விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.