நாசா, ஜன 1–
“விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் புத்தாண்டை கொண்டும்போது அவர்கள் 16 முறை சூரியோதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பார்கள்.
விண்வெளி மையம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் போது அவர்கள் சூரிய உதயத்தை காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கூறியிருப்பதாவது:–
“2024ம் ஆண்டு முடியும் போது எக்ஸ்ப்–72 குழுவினர் 16 முறையை சூரியோதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் காண்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் விண்வெளி வீரர் பேரிவில்மோருடன் போயிங் ஸ்டார்லிங் விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் 9 நாட்களில் பூமிக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில தொழில்நுட்பக் கோளாறுகளால் அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், கிறிஸ்துமஸ் பண்டிகையையும் அங்கேயே கொண்டாடினார். இதுபற்றிய விடியோ ஒன்றை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா பகிர்ந்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரிவில்மோர் மார்ச் மாதத்தில் பூமிக்கு திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் பிப்ரவரியில் திரும்புவதற்குத் திட்டமிடப்பட்டனர். ஆனால், ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ–10 பணியின் தாமதம் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
பேரி வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸுக்கு இரண்டு காலி இருக்கைகளுடன், க்ரூ-9 இன் இரண்டு விண்வெளி வீரர்கள் செப்டம்பர் மாத இறுதியில் விண்வெளி நிலையத்திற்கு வந்தனர். 2025ம் ஆண்டு பிப்ரவரியில் நால்வரும் வீடு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.