குடியரசு தலைவர் மாளிகை அதிர்ச்சி தகவல்
டெல்லி, ஜூன் 23–
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை கடந்த மே மாதம் 28ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சிகள், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை.
யாரும் அழைக்கவில்லை
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகேத் கோகலே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு குடியரசு தலைவர் மாளிகை பதில் அளித்துள்ளது. அந்த பதிலில், புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு மக்களவை தலைவர் ஓம் பிர்லா, பிரதமர் மோடி உள்ளிட்ட யாருமே அழைப்பு விடுக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளது.