வாணியம்பாடி, மார்ச் 25-
வாணியம்பாடி அருகே பிளஸ் 2 மாணவியை ஏற்றாமல் சென்ற அரசு பஸ்சின் டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.30 மணியளவில் புறப்பட்ட அரசு பஸ் ஒன்று கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் வழியாக ஆலங்காயம் நோக்கிச் சென்றுள்ளது. கொத்தக்கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே பிளஸ் 2 மாணவி உள்பட பல பெண்கள் நின்றிருந்த நிலையில், அந்த நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்தாமல் டிரைவர் முனிராஜ் ஓட்டிச் சென்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பிளஸ் 2 மாணவி பஸ்சில் ஏறுவதற்காக நீண்ட தொலைவுக்கு அதன் பின்னால் வேகமாக ஓடியுள்ளார். பிறகு பஸ் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து அந்த மாணவி அதில் ஏறி பயணம் மேற்கொண்டார்.
பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வரும் சூழலில், மாணவியை ஏற்றாமல் நீண்ட தொலைவுக்கு பின்னால் ஓடி வந்த பிறகு ஏற்றிச் சென்ற பஸ் டிரைவருக்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. இதனை அவ்வழியாக சென்ற சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில், அரசுப் பஸ் டிரைவர் முனிராஜை இடைநீக்கம் செய்து போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.