தமிழகத்தில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி
சென்னை, மே 8–
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில் மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகம்.
தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி கடந்த மாதம் 17ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து மதிப்பெண் விவரம் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்னதாக இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்ளுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணியளவில் வெளியானது. சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
https://results.digilocker.gov.in மற்றும் www.tnreuslts.nic.in ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர்.
தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதவிர, தேர்வு முடிவுகள் மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 ஆகும். இதில் 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகள், 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்கள் அடங்கும். ஒருவர் மூன்றாம் பாலினத்தவர் ஆவார்.
தேர்ச்சி சதவீதம் அதிகம்
பிளஸ்–2 பொதுத்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142, இது 95.03 சதவீத தேர்ச்சி ஆகும். இதில் மாணவிகள், 4 லட்சத்து 05 ஆயிரத்து 472, (96.70 சதவீதம்), மாணவர்கள் 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 பேர் (93.16 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் அதிகமாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் தேர்வு எழுதிய நிலையில், அவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள் – 10,049 ஆகும்.
தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 8,019 ஆகும். இதில் 7,466 (93.10%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வெழுதிய 140 சிறை கைதிகளில் 130 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பொதுத்தேர்வு எழுதிய மொத்தமுள்ள 7513 மேல்நிலைப்பள்ளிகளில், 100% தேர்ச்சிப் பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 2,638 ஆகும். இதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 436 ஆகும்.
தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகள் 91.94%, அரசு உதவி பெறும் பள்ளிகள் 95.71%, தனியார் சுயநிதி பள்ளிகள் 98.80%, இருபாலர் பள்ளிகள் – 95.30 % பெண்கள் பள்ளிகள் – 96.50% ஆண்கள் பள்ளிகள் – 90.14% இடம் பிடித்துள்ளன.
அறிவியல் பாடப் பிரிவுகளில் 96.99%, வணிகவியலில் – 92.68%, கலைப்பிரிவுகள் 82.90%, தொழிற்பாடப் பிரிவுகள் 84.22% தேர்ச்சி் பெற்றுள்னர்.
அரியலூர் முதலிடம்
அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 98.82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, முதலிடத்தை பிடித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் 97.98 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று 2ம் இடத்தையும், திருப்பூர் மாவட்டம் 97.53 சதவீத தேர்ச்சியுடன் 3ம் இடத்தையும் பிடித்துள்ளன. கோவை மாவட்டம் 97.48 சதவீதத்துடன் 4ம் இடத்தில் உள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் 97.01 சதவீதம் பெற்று 5வது இடத்தில் உள்ளது.
சென்னை மாவட்டம் 94.44% தேர்ச்ச பெற்று 23வது இடத்தில் உள்ளது. குறைந்தபட்சமாக வேலூர் மாவட்டத்தில் 90.79 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களும் 90 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழில் 135 பேர் சதம்
தமிழ் பாடத்தில் 135 பேர் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டு 35 பேர் மட்டும் 100 மதிப்பெண் எடுத்திருந்தனர். ஆங்கில பாடத்தில் யாருமே 100 மதிப்பெண் எடுக்கவில்லை. கடந்து ஆண்டு ஆங்கிலத்தில் 7 பேர் நூற்றுக்கு நூறு எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்பியல் பாடப்பிரிவில் 1,125 பேரும் 100 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளனர். இதேபோல வேதியியல் – 3,181 பேர், உயிரியல் – 827 பேர், கணிதம் – 3,022 பேர், தாவரவியல் – 269 பேர், விலங்கியல் – 36 பேர், கணினி அறிவியல் – 9,536 பேர், வணிகவியல் – 1,624 பேர், (கடந்த ஆண்டு 6142 பேர் 100 மதிப்பெண் எடுத்திருந்தனர்) கணக்கு பதிவியல் – 1240 பேர், பொருளியியல் – 556 பேர், (கடந்த ஆண்டு 3299 பேர்) கணினிப் பயன்பாடுகள் – 4,208 பேர், வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல் – 273 பேரும் 100 சதவிகித மதிப்பெண் எடுத்துள்ளனர். பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 26,887 ஆகும். இதில் அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 2,853 ஆகும்.
பிளஸ்–2 தேர்வு முடிவுகளில் பாடவாரியான தேர்ச்சி விகிதத்தில் கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக 99.78 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.