சென்னை, அக். 8–
பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் போதைப்பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என டிஜிபி விளக்கம் அளித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், “போதைப் பொருள்களை ஒழிக்க வேண்டும் என சென்னையில் பல பெற்றோர்கள் என்னிடம் புகார் அளிக்கின்றனர். தமிழகத்தில் அதிகளவு கஞ்சா பிடிக்கப்பட்டதாக மட்டுமே தகவல்கள் உள்ளது. பிற போதைப்பொருட்கள் பிடிக்கப்படுவதாக தகவல் இல்லை என்று குற்றம் சாட்டினர்.
இந்நிலையில் போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கல் தொடர்பாக 2022-ல் 645 பேர், 2023-ல் 504 பேர், 2024 ஆகஸ்ட் வரை 533 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 முதல் ஆகஸ்ட் 2024-வரை போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களின் 8,949 வங்கி கணக்குகளில் ரூ.18.03 கோடி முடக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போதைக்கு எதிரான குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஆகஸ்ட்டு வரையில் 641 வழக்குகளில் 1965 கிலோ கஞ்சா, 10634 போதை மாத்திரைகள், 35,500 கிலோ மற்ற மருந்துகள், மெத்தம் பெட்டமைன், ஆம்பெடமைன், கஞ்சா சாக்லேட்டுகள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் 1148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதைப் பொருள் தொடர்பாக 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஜார்க்கண்ட், ஆந்திரா, மேற்குவங்கம், அருணாச்சல பிரதேசம் என 6 பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் உட்பட 52 பேர் கைது செய்யப்பட்டனர். சமீப காலமாக தமிழகத்தில் போதைப் பொருள் பரவலாக இருப்பதாக சில குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், தரவுகளின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் போதைப் பொருள் பரவல் குறைவாக உள்ள பாதுகாப்பான மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போதைப் பொருள் பயன்பாடு மற்றும் பரவல் குறித்து இந்திய அரசால் ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்படி, கஞ்சாவின் பயன்பாடு தமிழகத்தில் 0.1 சதவீதம் (35வது இடம்), தேசிய சராசரியான 1.2 சதவீதத்தை விட மிகக் குறைவு. அதேபோல் தமிழகத்தில் ஓபியம் வகை போதைப் பொருள் பயன்பாடு 0.26 சதவீதம் (35வது இடம்), இது தேசிய சராசரியான 2.06 சதவீதத்தை விட மிகக்குறைவு. இதேபோல், மனமயக்க மருந்துகளின் பயன்பாடு 0.3 சதவீதம் (33வது இடம்) இது தேசிய சராசரியான 1.08 சதவீதத்தை விட மிகக்குறைவு. தமிழகத்தில் போதைப் பொருட்களின் பரவல் மிகவும் குறைவாக உள்ளது என்பதை இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.