இந்தூர், டிச. 13–
பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா கைது செய்யப்பட்டார்.
மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜா பட்டேரியாவின் வீடியோ ஒன்று அண்மையில் இணையத்தில் வெளியானது. அதில் ராஜா பட்டேரியா, அரசியல் சாசனத்தை காப்பாற்ற பிரதமரை கொலை செய்ய வேண்டும் என்றும், அவரை கொலை செய்ய வேண்டுமென்றால் பிரதமரை தோற்கடிக்கச் செய்ய வேண்டும் என்றும் விளக்கிக் கூறியிருந்தார். இருப்பினும் இந்த வீடியோ தொடர்பாக பாஜகவினர் அளித்த புகாரின் பேரில் நேற்று பட்டேரியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
காங்கிரஸ் விளக்கம்
இந்நிலையில் இந்த வீடியோ குறித்து காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் அளித்த பேட்டியில், மோடி தேர்தல் நடைமுறைகளை அழித்துவிடுவார். அவர் மதத்தாலும், சாதியாலும், மொழியாலும் எல்லோரையும் பிரிப்பார். தலித்துகள், பழங்குடிகள், சிறுபான்மையினர் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற நினைத்தால் மோடியைக் கொல்லுங்கள். அதாவது அவரை தோற்கடியுங்கள்” என்று தான் பட்டேரியா பேசியிருந்தார் என விளக்கினார்.
ஆனாலும் பன்னா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், காங்கிரஸ் மூத்த தலைவர் பட்டேரியா கைது செய்யப்பட்டுள்ளார்.