புதுடெல்லி, ஜன. 30–
பிபிசி ஆவணப்படம் வழக்கு பிப்ரவரி 6-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட இன கலவரத்துக்கு அப்போது அந்த மாநில முதல்-மந்திரியாக இருந்த தற்போதைய பிரதமர் மோடிக்கு தொடர்பு உள்ளதாக இங்கிலாந்தை சேர்ந்த பி.பி.சி. செய்தி நிறுவனம் ஒரு ஆவண படத்தை தயாரித்து வெளியிட்டு உள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தை இந்தியாவில் வெளியிட தடைவிதிக்கப்பட்டுள்ளது. அரசின் தடையை மீறி நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் அந்த ஆவண படத்தை திரையிட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் பிபிசி ஆவணப்படத்தை மத்திய அரசு முடக்கியதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு முன்பாக எம்.எல்.சர்மா தரப்பு வலியுறுத்தியது. இதனை ஏற்று கொண்டு வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தலைமை நீதிபதி சந்திர சூட் ஒப்புதல் அளித்தார். இதனை அடுத்து பிப்ரவரி 6-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.