மும்பை, பிப். 17–
இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து சர்ச்சை கருத்துக் கூறிய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
தனியார் டி.வி. சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா சர்ச்சையில் சிக்கினார். தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோருடன் கலந்து ஆலோசித்த அணியின் உள்விவகாரங்களை தேவையில்லாமல் வெளியிட்ட அவர், நிறைய வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இல்லாவிட்டாலும் கூட கிரிக்கெட் களத்திற்கு சீக்கிரம் திரும்புவதற்காக ஊசி போட்டுக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.
கசிந்த ரகசியங்கள்
அண்மையில் காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இரு விதமான கருத்துகள் நிலவியதாகவும், ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதில் அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு விருப்பமில்லை என்றும் ஆனால் அவருக்கு கோலியையும் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
இப்படி அணியின் பல்வேறு விஷயங்களை கசியவிட்ட சேத்தன் சர்மாவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டதோடு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. இதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். சேத்தன் சர்மா தனது பதவி விலகல் கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிற்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது கடித்தை ஜெய் ஷா ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.