மும்பை, அக். 18–
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, ரூ.5 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் (வயது 58) மும்பையின் பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் 14 ந்தேதி அதிகாலை அவர் வீடு அருகே துப்பாக்கிச்சூடு நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயுத சப்ளை செய்த மேலும் 2 பேரையும் கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சல்மான் கானை கொலை செய்ய சிறையில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து இருந்தனர்.
ரூ.5 கோடி கேட்டு மிரட்டல்
இந்நிலையில், பாலிவுட் நடிகர் சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும் என்று மர்ம நபர்கள், மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
அந்த வாட்ஸ் ஆப் மிரட்டல் செய்தியில் கூறியிருப்பதாவது:–
லாரன்ஸ் பிஷ்னோய் உடனான பகையை முடிவுக்கு கொண்டு வந்து, சல்மான் கான் உயிருடன் இருக்க வேண்டும் என்றால், ரூ.5 கோடி கொடுக்க வேண்டும். கொடுக்க தவறினால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக்கை விட சல்மான் கானின் நிலை மோசமாக இருக்கும். இந்த அச்சுறுத்தலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பின்றி எங்கும் செல்ல வேண்டாம் என்றும் போலீசார் அவருக்கு அறிவுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.