திருவனந்தபுரம், மார்ச் 5–
சிறுவனுக்கு பாலியல் தொல்லை தந்தவருக்கு 107 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கேரள நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் கோட்டூரில் வசித்து வருபவர் 60 வயது தாமோதரன். இந்த முதியவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு 11 வயது மாணவனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
107 ஆண்டு தண்டனை
இந்த சம்பவம் குறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் அந்த முதியவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அத்துடன் அவர் மீது போக்சோ போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் விரைவு நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் முதியவர் தாமோதரனுக்கு 107 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 4.50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து அபராத தொகையை செலுத்த தவறிவிட்டால் மேலும் 6.5 ஆண்டுகள் சிறை தண்டனை நீட்டிக்கப்படும் எனவும் நீதிபதி கூறியுள்ளார்.