சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஹேக், நவ. 22–
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாராண்டு பிறப்பித்து உள்ளது.
பாலஸ்தீனத்தை ஆக்ரமித்துள்ள இஸ்ரேலுக்குள், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் என்ற பாலஸ்தீன அமைப்பு நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் பணயகைதிகளாக அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் அவர்களை மீட்கவும், ஹமாஸ் அமைப்பை அடியோடு அழிக்கவும் இஸ்ரேல் ஆயுதங்களை கையில் எடுத்தது. அப்போது முதல் ஹமாஸ் அமைப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் இதுவரை பல ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மனித தன்மையற்ற இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. அதுதவிர அண்டை நாடுகளான லெபனான், ஈரான் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இருப்பதால், அவர்கள் மீதும் இஸ்ரேல் தாக்குத்ல் நடத்தி வருகிறது. அதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது எதிர் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
சர்வதேச நீதிமன்றம் அதிரடி
இதனால் இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக இணைந்து, இஸ்ரேலுக்கு எதிராக கூட்டாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எனினும் இஸ்ரேல் அதிபர் எதற்கும் அஞ்சாது அடாவடியாக அண்டை நாடுகளில் உள்ள அப்பாவி பொதுமக்களையும் தாக்கி கொன்று குவித்து வருகிறார்.
போரில் பாலஸ்தீனியர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதனை சர்வதேச நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
இந்த நிலையில் போர் பெயரில் மனிதர்களை கொன்று குவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரியை கைது செய்ய கோரி பிடிவாண்டு பிறப்பித்து சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இப்ராஹிம் அல்மஸ்ரிக்கும் எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அவரும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது. ஒருவழியாக இந்த போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் இருதரப்பு தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் போர் சற்று ஓய்வு நிலைக்கு செல்லும். அதனை தொடர்ந்து போர் அமைதி பேச்சுவார்த்தை திட்டம் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.