தாம்பரம் மாநகர போலீஸ் அறிவிப்பு
சென்னை, அக். 15–
பாலங்கள் மீது நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பள்ளிக்கரணை பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர்.
சென்னைவாசிகள், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்படுகின்றன. இந்நிலையில் இம்முறை அவ்வாறு ஒரு சூழல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களும் தங்கள் உடமைகளை காக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதில் ஒன்றுதான் தங்கள் வாகனங்களை பத்திரப்படுத்துதல். நாளை சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முதலே தங்கள் கார்களை வேளச்சேரி மேம்பாலத்திலும், பள்ளிக்கரணை மேம்பாலத்திலும் நிறுத்த தொடங்கி விட்டனர். மேம்பாலத்தில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என போலீசார் தெரிவித்தும் அதனை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
அபராதம் இல்லை
இதனையடுத்து மேம்பாலத்தின் மீது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1000 காவல்துறையால் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அபராதம் விதித்தாலும் பரவாயில்லை எனக் கூறி, உரிமையாளர்கள் கார்களை எடுக்க மறுத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் வாகனங்களை பாலத்தின் மீது நிறுத்த, எவ்வித தடையும் இல்லை. அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பள்ளிக்கரணை பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர்.
இன்று சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. நாளை எவ்வளவு மழை பெய்யும் என தெரியவில்லை. மழையை கருத்திற்கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஐடி ஊழியர்கள் வீடுகளிலிருந்து வேலை பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.