செய்திகள்

பார்லிமெண்டில் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் சிங்வி இருக்கைக்கு அடியில் பணக்கட்டு கண்டுபிடிப்பு

Makkal Kural Official

புதுடெல்லி, டிச. 6–

காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டு உள்ளதாக ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25–ந்தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கூட்டம் துவங்கியதில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடி இன்றைய அலுவல் நேரங்கள் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, மக்களவையை டிசம்பர் 9ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.

ராஜ்யசபை கூடியதும், தெலுங்கானாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட, காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்வி மீது சபாநாயகர் ஜெகதீப் தன்கர் புகார் ஒன்றை கூறினார். அவர் கூறியதாவது: காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கிய இருக்கையில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராஜ்யசபைக்குள் பணம் வந்தது எப்படி? பின்னணியில் வேறு காரணம் உள்ளதா? என விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. நேற்று அவை நடவடிக்கைகள் முடிந்த பின் நடந்த சோதனையில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மல்லிகார்ஜுன் கார்கே

இது குறித்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், ‘விசாரணை முடிந்து, சம்பவத்தின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் வரை, ஒரு உறுப்பினரின் பெயரை வெளியிடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்‘ என வலியுறுத்தினார்.

ராஜ்யசபையில், மத்திய அமைச்சர் ஜே.பி., நட்டா கூறியதாவது: இது சபையின் கண்ணியத்தை புண்படுத்துகிறது. விரிவான விசாரணை நடத்தப்படும் என்று அவை தலைவர் கூறியதால், உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது, என்றார்.

இந்த குற்றச்சாட்டு குறித்து, அபிஷேக் மனு சிங்வி கூறியதாவது: நான் நேற்று ராஜ்யசபைக்கு செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டுமே எடுத்து சென்றேன். 12.57 மணிக்கு அவைக்குள் நுழைந்தேன். 1 மணிக்கு அவை கலைந்து விட்டது. 1.30 மணி வரை கேண்டீனில் இருந்தேன். அதன் பிறகு பார்லிமெண்டில் இருந்து கிளம்பி விட்டேன். இந்த விவகாரம் பற்றி, இப்போது தான் முதல்முறையாக கேள்வி படுகிறேன்.

ஒவ்வொரும் எம்.பி.,யும் இருக்கையை பூட்டி சாவியை எடுத்து செல்லக்கூடிய வகையில் இருக்கை இருந்தால் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கலாம். பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக நடந்து இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். இது குறித்து தவறு இருந்தால் முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *