ராமநாதபுரம் மார்ச். 26–
பாம்பன் புதிய ரயில் பாலம் வரும் ஏப்ரல் 6 ந் தேதி பாரத பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்படும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் ராமேஸ்வரத்தில் அளித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
பாம்பனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் மற்றும் ராமேஸ்வரத்தில் நடைபெற்று வரும் ரயில் நிலைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவும் பிரதமர் வருகையை ஒட்டி திறப்பு விழாவிற்கான ஏற்பாடு குறித்து ஒத்திகை நடத்துவதற்காக சிறப்பு தனி ஆய்வு ரயில் மூலம் ராமேஸ்வரம் வந்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்என்சிங் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தை ஆய்வு செய்த பின் செய்தியாளரிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர் வரும் ஏப்ரல் 6–ம் தேதி ராம நமமி அன்று பாரத பிரதமர் நரேந்திர மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க இருப்பதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பேசிய அவர் ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரம் செல்லும் சிறப்பு ரயிலை மோடி கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
பாம்பன் கடலில் உள்ள பழைய ரயில் தூக்கு பாலம் மோசமான நிலையில் இருப்பதால் பாலத்தை அகற்றுவதில் சிரமம் இருப்பதால் அதனை அகற்றுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இடையேயான ரயில் சேவை பணிகள் குறித்து நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் மாநில அரசுடன் பேசி விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார்.