செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ, ரேடார் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் சேதப்படுத்தப்பட்டன: கர்னல் சோபியா குரேஷி

Makkal Kural Official

புதுடெல்லி, மே 10–

பாகிஸ்தான் ராணுவம் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளங்கள், ரேடார் தளங்கள், ஆயுதக் கிடங்குகளை இந்திய ராணுவம் தாக்கியதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார்.

இந்தியா–-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக, புதுடெல்லியில் இன்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் பங்கேற்றனர்.

அப்போது மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி கூறியதாவது:–

போர் பதற்றத்தை சிக்கலாக்கும் நடவடிக்கைகளை தான் பாகிஸ்தான் எடுத்து வருகிறது. பொறுப்பான முறையில் இந்தியா பதிலடி கொடுக்கிறது. பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் ராணுவம் தரும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். எஸ்-400 ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானது. இந்தியாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது என பாகிஸ்தான் வதந்திகளை பரப்புகிறது. மதத் தலத்தில் இந்தியா ஏவுகணைகள் வீசியதாக பாகிஸ்தான் கூறுவது அபத்தமானது.

இந்திய ஏவுகணைகள், ஆப்கானிஸ்தானை நோக்கி ஏவப்பட்டதாக பரப்பப்படும் தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் மீது பல முறை தாக்குதல் நடத்தியது எந்த நாடு? என்பதை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நினைவூட்ட வேண்டிய அவசியமில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எல்லை பகுதியில் ராணுவத்தை பாகிஸ்தான் அதிக அளவில் குவித்து வருகிறது. பொதுமக்களின் உட்கட்டமைப்புகளை சிதைப்பது தான் பாகிஸ்தானின் நோக்கம். பாகிஸ்தான் இன்று அதிகாலை அதிவேக ஏவுகணைகளை கொண்டு பஞ்சாப் விமானப்படை தளத்தை தாக்க முயன்றது முறியடிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

போர் விமானங்களை

பயன்படுத்திய பாகிஸ்தான்

இவரை தொடர்ந்து ர்னல் சோபியா குரேஷி பேசியதாவது:–

பாகிஸ்தான் ராணுவம் எல்லையோரப் பகுதிகளில் கண்டிக்கத்தக்க தாக்குதல்களை நடத்தியது. ஸ்ரீநகர், அவந்திபூர் மற்றும் உதம்பூர் விமான தளங்களில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளி வளாகங்களை பாகிஸ்தான் குறிவைத்தது. இது மீண்டும் ஒருமுறை அவர்களின் பொறுப்பற்ற போக்கை வெளிப்படுத்தியது.

பாகிஸ்தான் அதிவேக ஏவுகணையை பயன்படுத்தி வேண்டுமென்றே விமானப்படை தளங்களை குறிவைத்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, இந்திய ஆயுதப்படைகள் விரைவான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட பதில் நடவடிக்கையை எடுத்து பாகிஸ்தானின் தொழில்நுட்ப நிறுவனங்கள், கட்டுப்பாட்டு மையங்கள், ரேடார் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்தன.

ரபிகி, முரித், சக்லாலா, ரஹீம் யார் கான், சுக்கூர் மற்றும் சுனியன் ஆகிய இடங்களில் உள்ள பாகிஸ்தான் ராணுவ தளங்கள் வான்வழி ஏவுதல், துல்லிய வெடிமருந்துகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் குறிவைக்கப்பட்டன. பஸ்ரூரில் உள்ள ரேடார் தளம் மற்றும் சியால்கோட்டில் உள்ள விமான தளமும் வெடிமருந்துகளால் துல்லியமாக குறிவைக்கப்பட்டன.

மேற்கு பகுதியில், பாகிஸ்தானின் ஆக்ரோஷமான நிலைப்பாடு தொடர்ந்தது. அது இந்திய ராணுவத்தை குறிவைக்க முயன்றது. ஸ்ரீநகரிலிருந்து சாலியா வரை 26 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. உதம்பூர், ஆதம்பூர், பதான்கோட் மற்றும் பதிண்டாவில் உள்ள விமானப்படை தளங்களில் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீநகர், அவந்திபூர் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைகளை பாகிஸ்தான் குறிவைத்தது.

பாகிஸ்தான் ராணுவம் எல்லைப் பகுதிகளுக்கு தங்கள் படைகளை நகர்த்துவதை இந்திய ராணுவம் கண்டறிந்தது. மேற்கு முன்னணியில் உள்ள இந்தியாவின் ராணுவ தளங்களைத் தாக்க பாகிஸ்தான் ட்ரோன்கள், நீண்ட தூர ஆயுதங்கள், சுழன்று தாக்கும் வெடிமருந்துகள், ஜெட் விமானங்களைப் பயன்படுத்தியது. இந்த நடவடிக்கைகளின் போது, பாகிஸ்தானின் குறைந்தபட்ச சேதம் மற்றும் இழப்புகளை இந்தியா உறுதி செய்துள்ளது என்று தெரிவித்தார்.

வியோமிகா சிங் பேட்டி

விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறியதாவது:–

இந்திய விமான தளங்கள் உள்ள உதம்பூர், பதான்கோட் பகுதிகளில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராணுவ தளவாடங்கள் இருக்கும் பகுதிகளை மட்டுமே இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. விமானதளம் அழிக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் பொய் கூறுகிறது. விமான தளம் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவின் சூரத்கர் விமானப்படை தளம் பாதுகாப்பாக இருப்பதை நிரூபிக்கும் வகையில், ‘டைம்ஸ்டாம்ப்’ உடன் கூடிய படங்களை, வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *