இஸ்லாமாபாத், மார்ச் 12–
பாகிஸ்தானில் ரெயிலில் கடத்தப்பட்டவர்களில் 155 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். துப்பாக்கிச்சூட்டில் தீவிரவாதிகள் 27 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்கு நேற்று காலை ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் பலுசிஸ்தான் மாகாணம், முஷ்கப் பகுதி சுரங்கப் பாதையில் வந்தபோது தண்டவாளம் வெடிவைத்து தகர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.
அப்போது பலுச் விடுதலை படையை (பி.எல்.ஏ.) சேர்ந்தவர்கள், ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சிறைபிடித்தனர். ரெயிலின் குறிப்பிட்ட பெட்டிகளில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் பயணம் செய்தனர். அவர்களுக்கும் கிளர்ச்சிப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் 30 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ரெயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட 450 பயணிகளை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அவர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் தற்போதைய நிலவரப்படி 27 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 58 பேர் ஆண்கள், 31 பேர் பெண்கள், 15 பேர் உட்பட 155 பிணைக் கைதிகள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்னொரு ரெயில் மூலம் பாலோசிஸ்தான் மாகாணத்தின் கச்சி மாவட்டத்தில் உள்ள மாக் நகருக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். எஞ்சிய பயணிகளை மீட்கும் வகையில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தீவிரவாதிகளை வீழ்த்தும் பணி தொடரும், அனைத்து பிணைக் கைதிகளும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது.