இஸ்லாமாபாத், மே 2–
பாகிஸ்தான் எப்எம் (FM) வானொலி நிலையங்களில் இந்திய திரைப்பட பாடல்களை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இந்திய பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
ஏட்டிக்கு போட்டி தடை
இதன் காரணமாக பாகிஸ்தான் மீது சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, விசா நிறுத்தி வைப்பு, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. பதிலுக்கு இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் பாகிஸ்தான் நாட்டு வான் பரப்பில் பறக்க தடை, வர்த்தக நிறுத்தம், இந்தியர்கள் வெளியேற்றம், சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) நாடு முழுவதும் உள்ள பாகிஸ்தான் எப்எம் (FM) வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. இதற்கு பாகிஸ்தானின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அட்டா தரார் ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் இந்த செயலை தேசபக்திக்கான எடுத்துக்காட்டு என கூறியுள்ளார்.