செய்திகள் நாடும் நடப்பும்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கை

Makkal Kural Official

இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் மக்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும்

புதுடெல்லி, ஏப். 24–

காஷ்மீர் தாக்குதலுக்கு பாடம் கற்பிக்கும் விதமாக பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. வாகா எல்லை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தூதரகம் முன் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டெல்லி போலீசார் அகற்றினர்.

பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு நேற்று முன்தினம் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீசாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் மோடி இல்லத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பாதுகாப்பு செயலாளர், முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டம் 2½ மணி நேரம் நடந்தது.

சோதனைச் சாவடி மூடல்

இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது.

* எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- – பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுகிறது.

* பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும்.

* பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி இல்லை

பாகிஸ்தானியர்களுக்கு

அனுமதி இல்லை

* சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்.

முப்படை தயார்

* டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் மே 1-ந்தேதிக்குள் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும்

* இஸ்லாமாபாத் இந்திய தூதரகத்தில் உள்ள முப்படை ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்படுகிறது.

தயார் நிலையில் முப்படைகள்

* மேலும் முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இரு நாட்டு எல்லையில் பெருமளவில் படைகள் குவிக்கப்பட்டு வருவதால் போர்ப் பதட்டம் நிலவுகிறது. பாகிஸ்தானின் போர் விமானங்களை எல்லையில் நிலைநிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று நடைபெற இருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பேசுகிறார்கள்.

சிந்து நதி நிறுத்தம்

இந்தியா பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஒப்பந்தம் 1960ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதன்படி, சட்லெஜ், பியாஸ், ரவி ஆகிய மூன்று நதிகளும் முற்றிலும் இந்தியாவுக்கு சொந்தமானவை. அவற்றில் வரும் நீரை இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகளும் பாகிஸ்தானுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த நதிகளில் வரும் தண்ணீரை இந்தியா முற்றிலும் பயன்படுத்த முடியாது.

குடிநீர் வினியோகம், பாசனம், நீர் மின்சார உற்பத்தி ஆகியவற்றுக்கு இந்தியா பயன்படுத்திக் கொள்ளலாம். பெரிய அளவில் அணைகள் எதுவும் கட்டி இந்த மூன்று நதிகளின் நீரை சேகரிக்கக்கூடாது. இந்த நதிகளில் எந்த அளவு இந்தியா தண்ணீர் பயன்படுத்தலாம் என்பதற்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமீப காலம் வரை, இந்த நதிகளில் இந்தியாவுக்கு அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவாகவே இந்தியா பயன்படுத்தி வருகிறது.

இந்த சிந்து நதிநீர் ஒப்பந்தம், இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 1965, 1971 போர்கள், கார்கில் போர் ஆகியவற்றை கடந்தும் செயல்பாட்டில் இருந்தது. மும்பையில் 26/ 11 தாக்குதல் நடந்த நிலையிலும் இந்த ஒப்பந்தத்தை இந்தியா தொடவில்லை. இதற்கு பாகிஸ்தானிய விவசாயிகள் பாதிக்கப்படுவர், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற மனிதாபிமான அடிப்படையே காரணம்.

ஆனால் அமைதிக்கு திரும்பி கொண்டிருக்கும் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளை சுட்டுக்கொன்ற சம்பவத்தை தொடர்ந்து, முதல்முறையாக இந்த ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக இந்தியா அறிவித்துள்ளது. ஒப்பந்தத்தை இடைநிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளதன் மூலம், மேற்கு நோக்கி பாயும் மூன்று நதிகளிலும் தண்ணீரை தடுத்து நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க உள்ளது.

மூன்று நதிகளிலும் எங்கெல்லாம் வாய்ப்புள்ளதோ அந்த இடங்களில் எல்லாம் தண்ணீர் திருப்பி விடப்படும். இந்தியாவின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானில் குறைந்தது இரண்டு மாநிலங்களில் குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்களை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடியும் என்று மத்திய அரசு நம்புகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *