டெல்லி, மே 9–
பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களை முறியடித்த இந்திய ராணுவம், அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது. தீவிரவாத முகாம்களை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத் தளங்களையும் வெற்றிகரமாக தகர்த்தெறிந்தது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதைத்தொடர்ந்து காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநில எல்லையோரங்களில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதனை எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு மூலம் அசால்டாக முறியடித்த இந்திய ராணுவம், பாகிஸ்தானின் முக்கிய ராணுவக் கட்டமைப்புகளை குறி வைத்து தாக்குதல் தொடுத்தது.
பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, பெஷாவர், சியால்கோட் பகுதிகளில் இந்திய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெபாஷ் ஷரிப் வீட்டின் அருகேயும் குண்டு மழை பொழிந்தது. அப்பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டதால் அசாதாரண சூழல் நிலவியது. லாகூரில் உள்ள பாகிஸ்தான் விமானப்படையின் பாதுகாப்பு அமைப்பு மீது ‘கமிகேஸ்’ (kamikaze) டிரோன் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இது தற்கொலை படை வகையை சேர்ந்த டிரோன் ஆகும்.
தடுப்பை தகர்த்த டிரோன்
ராவல்பிண்டியில் உள்ள கிரிக்கெட் மைதானமும் இந்திய ராணுவத்தின் டிரோன் தாக்குதலில் தப்பவில்லை. பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக இந்த டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. கராச்சியில் உள்ள பாகிஸ்தான் கடற்படை தளங்கள் மீதும் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்காக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் களமிறக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் லாகூருக்குள் புகுந்து ராடார் கட்டமைப்பை இந்தியா வெற்றிகரமாக தகர்த்தது. அட்டாரி எல்லையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த லாகூரில்தான் சீனாவின் தொழில்நுட்பத்தில் உருவான HQ-9 என்ற வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு உள்ளது. 150 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் எந்த வான்வழித் தாக்குதலையும் கண்காணித்து அதனை முறியடிக்கும் திறன் உள்ள ராடார் இது. இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இந்தியா ஏவுகணையையோ, டிரானையோ பாகிஸ்தானை நோக்கி செலுத்தினால் அதனை துல்லியமாக கண்காணித்து அழிக்கும் வல்லமை இந்த ராடாருக்கு உண்டு.
ஆனால் அதையும் தாக்கும் விதமாக இந்தியாவிடம் ஹார்பி டிரோன் இருந்ததை பாகிஸ்தான் மறந்திருக்கலாம். மணிக்கு 370 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து அடிக்கும் இந்த ஹார்பி ட்ரோன் தற்கொலை ட்ரோன் என அழைக்கப்படுகிறது. அதாவது வெடிபொருட்களுடன் பறந்து சென்று தாக்குதல் நடத்தி சிதறிப்போகக் கூடியவை இவை. இந்த ஹார்பி ட்ரோன்களை அடுத்தடுத்து லாகூரை நோக்கி இந்தியா ஏவி விட பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல் தடுப்பு ராடார்கள் நிலைகுலைந்து போயின. இந்த தாக்குதலுக்கு மத்தியில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சிறையில் இருந்து விடுவிக்க அவரது ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
பாகிஸ்தானின் 45 டிரோன்கள் தகர்ப்பு
பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவு முதல் ஸ்ரீநகர், சண்டிகர், பதான்கோட், ஜம்மு என காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் குஜராத்தை ஒட்டிய 15 நகரங்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி ட்ரோன்கள் மூலமும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்த முயன்றன. இந்த எதிர்பாரா தாக்குதலை இந்தியா எஸ் 400 வான் பாதுகாப்பு கவச அமைப்பு மூலம் அசால்ட்டாக முறியடித்தது. பாகிஸ்தானுக்கு சொந்தமான கிட்டத்தட்ட 45 டிரோன்கள் இந்தியாவின் எஸ் 400 ஏவுகணைகளுக்கு இரையாகின. எஸ் 400 ஏவுகணைகள் இந்திய பகுதிகளுக்கு கவசமாக இருந்தது.
நேற்றிரவு நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தனது 3 போர் விமானங்களை இழந்தது. பாகிஸ்தானின் F 16 ரக விமானம் மற்றும் இரண்டு JF 17 ரக விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதில், இந்திய தாக்குதலில் சேதமான F 16 ரக விமானத்தின் விமானி இந்திய பகுதிகளில் விழுந்தார். அவர் இந்திய படைகளால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
பாகிஸ்தானை கட்டுப்படுத்த இந்தியா விதவிதமான ஆயுதங்களை கையாண்டது. L 70 துப்பாக்கி, ZU -23 எம்எம், ஷில்கா சிஸ்டெம்ஸ் ஆகியவை இந்தியாவால் பயன்படுத்தப்பட்டது. இதில், பாகிஸ்தானின் தாக்குதல் தடுப்பு சாதனங்கள் பொய்த்துப் போயின. அவற்றின் டிரோன்கள் தவிடுபொடியாகின. பாகிஸ்தான் தாக்குதலை எதிர்கொள்ளும் விதமாகவும், அவற்றை முறியடிக்கும் விதமாகவும் இந்திய எல்லை பகுதிகளில் மின்சார துண்டிப்பு செய்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடதக்கது.