புதுடெல்லி, ஏப். 28–
பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் நடந்தது. எல்லையில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த 22ம் தேதி நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் முகாமிட்டு தேசிய புலனாய்வு முகமை தாக்குதல் குறித்த ஆதாரங்களைத் தேடி வருகின்றனர். கூடுதலாக இந்திய ராணுவம் எச்சரிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை அழிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டைகள் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த 23-ம் தேதி பாதுகாப்பு அமைச்சகத்துக்கான குழு (சிசிஎஸ்) தாக்குதல் தொடர்பான நடவடிக்கை எடுக்க அதன் கூட்டத்தைக் கூட்டியது. சிசிஎஸ் அளித்த விளக்கத்தில், இந்த தாக்குதலில் எல்லை தாண்டிய பயங்கரவாத்தின் தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுப்பட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டப்படும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார். இதனால் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி பாதுகாப்பு படைகளின் தலைவர் அணில் சவுகான் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று விளக்கியிருந்தார்.
இதனையடுத்து இன்று டெல்லியில் பிரதமரின் இல்லத்தில், மோடியை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். எல்லையின் சூழல் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சந்திப்பின் போது, பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என ராஜ்நாத் சிங்கிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக தெரிகிறது.