அமெரிக்கா, இங்கிலாந்து, பாரிசில் இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம்
வாஷிங்டன், ஏப். 28–
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா, இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 22ல் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணியர் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தக்க பதிலடி தருவதற்கு ஏற்பாடுகளில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு முன்னால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர்.
அப்போது, ”பாகிஸ்தானுக்கு அதன் சொந்த மொழியில் பதில் தர வேண்டும்” என்று ஒரு போராட்டக்காரர் கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்ற இந்திய வம்சாவளியினர் பயங்கரவாத தாக்குதலுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் இந்திய தேசியக்கொடியை கையில் வைத்து இருந்தனர். பாகிஸ்தான் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்ற பதாகைகளை ஒரு சிலர் வைத்து இருந்தனர்.
அமெரிக்காவிலும் ஆர்ப்பாட்டம்
பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ”காஷ்மீரில் ஹிந்துக்களுக்கு எதிராக நடத்தும் பயங்கரவாத தாக்குதலை நிறுத்த வேண்டும்” என்ற பதாகைகளை வைத்து இருந்தனர்.
இந்தியா ஹவுஸுக்கு எதிரே பிரிட்டிஷ் பாகிஸ்தானியர்களின் சிறிய குழுவை விட, “பாரத் மாதா கீ ஜெய்” மற்றும் “வந்தே மாதரம்” என்று கோஷமிட்டு இந்திய மூவர்ணக் கொடியை அசைத்து இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர்.