ஸ்ரீநகர், ஏப். 23–
காஷ்மீரின் பெஹல்காமில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகள் 4 பேரின் புகைப்படங்களை பாதுகாப்பு அமைப்புகள் வெளியிட்டு உள்ளன. அதில் 2 பேர் வெளிநாட்டினர் என தெரியவந்துள்ளது.
காஷ்மீரின் பெஹல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு பெற்ற கிளை அமைப்பு ஒன்று பொறுப்பு ஏற்றுள்ளது.
இந்த அமைப்பின் மூத்த தளபதி சைபுல்லா கசூரி தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதி ராணுவம் மற்றும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்நிலையில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் மற்றும் நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் பயங்கரவாதிகளின் உருவப்படம் வரையப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்கள் ஆசிப் பவுஜி, சுலைமான் ஷா, அபுத் தல்ஹா என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். மொத்தம் 6 பேர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், 3 பேரின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேரின் புகைப்படங்களை பாதுகாப்புப் படையினர் வெளியிட்டு உள்ளனர். இதில் 2 பேர் வெளிநாட்டினராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.