16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை
புதுடெல்லி, ஏப். 28–
இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக செயல்பட்ட 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தான் அரசின் எக்ஸ் சமூக வலைதள பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக ஆத்திரம் மூட்டும் வகையில் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை தொடர்ந்து 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பாகிஸ்தானை சேர்ந்த தனி நபர்கள் மற்றும் செய்தி நிறுவனங்களால் நடத்தப்படும் சேனல்கள் ஆகும்.
டான் நியூஸ், சமா டிவி, ஆரி நியூஸ், ஜியோ நியூஸ், ரப்தார், போல் நியூஸ், ஏஆர்ஒய் நியூஸ், சமா டிவி, சுனோ நியூஸ் மற்றும் முனீப் பரூக், உமர் சீமா, அஸ்மா ஷிராசி மற்றும் இர்ஷாத் பாட்டி உள்ளிட்ட பிரபல பத்திரிகையாளர்களின் யூடியூப் சேனல்கள் உள்ளிட்ட 16 யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.