செய்திகள்

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி

Makkal Kural Official

புதுடெல்லி, ஏப். 24–

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில், அமெரிக்க சுற்றுப் பயணத்தை பாதியில் ரத்து செய்து நாடு திரும்பிய ராகுல் காந்தி கலந்து கொண்டார்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்கா சென்றிருந்த ராகுல் காந்தி தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு நாடு திரும்பி உள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் இன்று கூடியது. இதில், காங்கிரஸ் தலைவர் கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்ததுடன், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இது தொடர்பாக காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “பஹல்காமில் பயங்கரவாதிகள் ஒரு கோழைத்தனமான தாக்குதலை நடத்தி உள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் நாங்கள் ஒற்றுமையாக நிற்கிறோம். இந்த முக்கியமான பிரச்சினை குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழுவின் முக்கியமான கூட்டம் இன்று நடைபெற்றது.

மவுன அஞ்சலி

கூட்டத்திற்கு முன், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் ஊடக மற்றும் விளம்பரத் துறையின் தலைவர் பவன்கேரா, “பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுமாறு அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடந்த 22ம் தேதி கோரிக்கை விடுத்தது. அந்தக் கோரிக்கையை ஏற்று, அரசாங்கம் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளது. இந்த விஷயத்தின் தீவிரத்தை பிரதமர் புரிந்துகொண்டு இதில் பங்கேற்பார் என்று நம்புகிறோம்.

பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் மீதான நேரடித் தாக்குதலாகும்” என தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *