பொன்னேரி ஜன-13–
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் கடற்கரையில் உயிரிழப்பதை தடுக்கும் வகையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் விழா நாட்களில் கடற்கரையில் அதிகமாக கூடுகின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக கடலில் குளிக்கும் போது அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு மரணம் அடைந்து வருகின்றனர். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்திலும் இரண்டு பேர் இறந்த நிலையில் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் தவறி விழுந்து இறப்பதை தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் பழவேற்காடு பகுதியில் உள்ள தன்னார்வர்களின் செயல்பாட்டு கூட்டமைப்பு சார்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி போகிப் பண்டிகையான இன்றும், நாளை பொங்கல் பண்டிகை மற்றும் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் தினங்களில் பழவேற்காடு கடற்கரைக்கு அதிகமான மக்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுவதால் கடலில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படகு சவாரிக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொங்கல் தினத்தில் சுற்றுலா பயணிகள் கடற்கரையில் குளிக்கும் போது தவறி விழுந்து விபத்து ஏற்பட கூடும் என அதை தவிர்க்கும் விதத்தில் பழவேற்காடு கடற்கரையில் அபாயக் கொடிகள் ஏற்றப்பட்டுள்ளது.
வருவாய் துறை சார்ந்த கிராம நிர்வாகிகள் மற்றும் பழவேற்காடு தன்னார்வலர்களின் செயல்பாட்டு கூட்டமைப்பினர் விபத்தை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கடற்கரையில் அபாய கொடிகளை நட்டனர். மேலும் சுற்றுலா பயணிகளை இப்பகுதியில் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக் கொண்டனர்.