நிர்மலின் மனது ரொம்பவும் ஈரமானது . யாரையும் காயப்படுத்திப் பேசுவது.தவறாக சித்தரிப்பது இல்லை முரண்பாடான விஷயங்களை பேசவும் மாட்டார் .மனிதர்களை நேசிக்கும் மாண்புடைய நிர்மல் விலங்குகளையும் அவ்வளவு நேசிப்பார் வீட்டுப் பிராணிகளை அவ்வளவு நேசிப்பார்
நேசிப்பு என்பது உயிர் வரை செல்லும் என்பது நிர்மலுக்கு தெரியும். அதனால் எதையும் அளவோடு நேசிக்க வேண்டும் என்று அவருக்கு ஒரு உதாரணம் அடி மனதை அறுத்துக் கொண்டிருந்தது .
அவர் வீட்டில் இருந்த சுமி என்ற அன்பான நாய் இப்போது அவர் முன்பே வாலாட்டிக் கொண்டிருந்தது .
ஆனால் ஒரு வாரமாக அன்பின் உருவமான அந்த நாய் எங்கிருந்தது என்று அவருக்குத்தான் தெரியும்.
சுமி என்று பெயரிடப்பட்ட அந்த நாய் நன்றியின் வடிவமாக நின்று கொண்டிருந்தது .
சுமியை உற்றுப் பார்த்தார் நிர்மல்.
அதன் கண்களில் ஈரம் தழும்பி நின்றது. அதன் அருகே சென்று தலையை தடவிக் கொடுத்தார்.
சுமி வளைய வளைய வந்தது. ஏதோ ஒரு மொழியில் பேசியது; நிர்மலுக்கு அழுகை தாங்க முடியவில்லை …
சுமியைக் கழுத்தோடு கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தார்.
ஏங்க சின்னப் புள்ள மாதிரி ஏன் இப்படி அழுதுட்டு இருக்கீங்க ?அதான் சுமி வந்தாச்சு இல்ல என்று நிர்மலின் மனைவி ஆறுதல் சொன்னாலும் அவரால் அழுகையை அடக்க முடியவில்லை
பேச முடியாமல் உளறினார் நிர்மல்.
சுமியின் முன்னால் சாப்பாடு வைத்து சாப்பிட சொன்னார். அது நிர்மலைப் பார்த்தபடி இருந்தது. சாப்பிடவில்லை.
சாப்பிடு டா நான் பண்ணது தப்புதான்.சாப்பிடு என்று எவ்வளவாக கெஞ்சிப் பார்த்தார். சுமி சாப்பிடாமலே இருந்தது .
நான் பண்ணது தப்புதான் என்னை மன்னிச்சிரு என்று சுமியைக் கழுத்தோடு கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தார் நிர்மல்.
சுமியும் அழ ஆரம்பித்தது. அங்கு ஒரு பாசப் போராட்டமே நடந்து கொண்டிருந்தது .
இதைப் பார்த்த மனைவியும் அழுது கொண்டிருந்தாள்.
வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டு பெண்ணான ரதிமீனா
ஏன் இப்படி ஆளாளுக்கு அழுதுகிட்டு இருக்கீங்க ?அதான் சுமி வந்துருச்சுல்ல என்று சொல்ல இருவரும் பேச முடியாமல் திணறினார்கள் .
அந்தத் திணறல் ரதிமீனாவையும் அழ வைத்தது .
சுமி எல்லோரையும் பார்த்தது.
ஒரு வாரத்திற்கு முன்னால் நிர்மல் வீட்டில் பாசமாக வளர்ந்து கொண்டு இருந்த சுமியை யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்று நினைத்தார் நிர்மல்.
காரணம் வெளியே சுமியை விட்டுட்டு வெளியே செல்ல முடியவில்லை .அப்படியே சென்றாலும் சில நாட்கள் இருக்க முடியவில்லை. அக்கம்பக்க வீட்டுக்காரர்கள் நாய் வளர்ப்பது எங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது என்று சத்தம் போட்டது; இவைகள் எல்லாம் சுமியை வீட்டில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தார் நிர்மல் .
அதற்கான கால அவகாசம் வரவே இல்லை. சுமி அம்மா அதனுடைய அம்மா என்று மூன்று நான்கு தலைமுறைகளாக வாழையடி வாழையாக வளர்ந்து வந்து சுமியை உடனடியாக அப்புறப்படுத்த முடியாமல் திணறினார் நிர்மல் .
ஒரு நாள் வேறு வழி இன்றி 25 கிலோ மீட்டர் தள்ளி போய் விட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார் நிர்மல்.
விட்ட இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் வந்த சுமி அதற்கு மேல் பாதை தெரியாமல் நிர்மல் எங்கே விட்டாரோ? அங்கேயே சுற்றி சுற்றிக்கொண்டிருந்தது. அன்றிலிருந்து சாப்பிடாமல் விரதம் இருந்தது; வழியைப் பார்த்தபடியே இருந்தது. சாப்பிடவில்லை. தூங்கவில்லை; அங்குமிங்கும் என்று அலைந்து கொண்டிருந்தது
சுமி ஒருநாள் நிர்மல் நண்பர் இருக்கும் இடத்திற்கு போக நிர்மல் நண்பரின் வாசனையை உணர்ந்த சுமி அவரை பார்த்துக் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தது.
இதுநிர்மல் வீட்டு சுமிதா. ஏதோ தப்பி வந்துவிட்டது போல என்று நினைத்து சுமியைத் தன் இரு சக்கர வாகனத்தை ஏற்றுக் கொண்டு நிர்மல் வீட்டில் விட்டான்.
கணவனுக்கு மனைவிக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியம் . வேறு யாருக்கும் தெரியாமல் இருந்தது .
சுமி தொலைந்து போய்விட்டதாக அதுவரையில் நாடகம் ஆடிக் கொண்டிருந்த நிர்மல் மனைவி ஆகியோருக்கு இப்போது பொசுக்கென்று அழுகை வந்தது. இருவரும் அழுது புலம்பினார்கள் .
எங்க போன சுமி . இவ்வளவு நாளா ஒன்னை காணாம நாங்க அழுதுட்டு இருந்தோம் என்று வேண்டுமென்றே தொலைத்ததை விட்டுவிட்டு நிர்மல் பொய்யாக அழுதது சுமிக்கு புரிந்து விட்டது போலும்.
அதுதான் அவர் வைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் சுமி அழுது கொண்டிருந்தது .
பேசுவது , சைகையில் பதில் சொல்வது, அன்பை உணர்வது, என்பது மனிதர்களுக்கு மட்டும் வாய்த்த சொத்தல்ல .
அது எல்லா உயிர்களுக்கும் இருக்கிறது என்பதை உணர்ந்த நிர்மல்
இனிமேல் சுமியை ஒரு வார்த்தை கூட தவறாக பேசக்கூடாது என்று எண்ணினார்.தன் வீட்டில் ஒருவராக சுமியை நினைத்தார்.
இனிமே அந்தக் தப்பு செய்ய மாட்டேன். நீ என் கூட இருக்கலாம் என்று அன்பான வார்த்தைகளை அள்ளிச் சொன்னார் நிர்மல்.என்னை மன்னித்து விடு என்று கூறிக்கொண்டே
அவர் சுமியையும் தடவிக் கொண்டு அழுது கொண்டே சொல்லச் சொல்ல அப்போதுதான் சமாதானமானது சுமி. அவர்கள் வைத்த உணவை சாப்பிட ஆரம்பித்தது . இப்போது நிர்மலையும் அவர் மனைவியும் நன்றியுடன் பார்த்துக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தது சுமி.