செய்திகள்

பயங்கரவாத தாக்குதலில் தமிழர்கள் படுகாயம் தமிழக அதிகாரி காஷ்மீர் செல்ல முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

Makkal Kural Official

சென்னை, ஏப்.23–-

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அதிகாரி காஷ்மீர் சென்று மீட்புப்பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-–

ஜம்மு -காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவிற்கு சென்றிருந்த பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் தமிழர்களான டாக்டர் பரமேஸ்வரன், (சென்னை) சந்துரு (வயது 83), பாலச்சந்திரா (57) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தகவலை கேள்விப்பட்டவுடன், பயங்கரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதல்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் உதவி மையம் தொடங்கப்பட்டு, 011-24193300 (தொலைபேசி எண்), 9289516712 (செல்போன் மற்றும் வாட்ஸ் அப் எண்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் கலெக்டர் விரைந்தார்

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளும். இதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையாளர் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் கண்டனம்

தாக்குதல் சம்பவத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:-–

ஜம்மு -காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத் தாக்குதல் மனசாட்சியையே உலுக்குகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. சொந்தங்களை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இத்தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். உடனடியாக, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையரைத் தொடர்பு கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுடன் பேசி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்துத் தர அறிவுறுத்தி இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *