செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு கண்டனம்: காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம்

Makkal Kural Official

ஸ்ரீநகர், ஏப். 23–

காஷ்மீரில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் , அம்மாநிலத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடக்கிறது. 35 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக முழு கடையடைப்பு போராட்டம் இன்று நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரின் பெஹல்காமில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு காஷ்மீரில் அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த தாக்குதலைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக – மத அமைப்புகள், வணிக அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் காஷ்மீரில் முழு கடையடைப்புக்கு இன்று அழைப்பு விடுத்திருந்தன.

இதனையடுத்து பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அனைத்து கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் ஆள் நடமாட்டம் இன்றி முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் அப்னி கட்சி போன்ற கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளன. அதேபோல், ஹூரியத் மாநாட்டின் தலைவரான உமர் பரூக் தலைமையிலான பல்வேறு மத அமைப்புகளின் கூட்டமைப்பான முதாஹிதா மஜ்லிஸ் உலேமா, “காஷ்மீர் மக்கள் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்று பயங்கரவாத தாக்குதலுக்கான தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

வர்த்தக சங்கத்தினர் கூறுகையில், நேற்று மனதை வலிக்கும் வகையில் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடக்கிறது. மனிதநேயத்திற்கு எதிரான மரணம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிராக உள்ளோம் என்றனர்.

தலைநகர் ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருந்தன. நகர்முழுவதும் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் மட்டுமே திறந்திருந்தன. பொதுப்போக்குவரத்து இயக்கப்படவில்லை. காஷ்மீர் முழுவதும் தனியார் பள்ளிகளும் இயங்கவில்லை. பிற மாவட்டத் தலைநகரங்களிலும் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அதேபோல் பல்வேறு இடங்களில் மக்கள் அமைதியான முறையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது பெஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *