கதைகள் சிறுகதை செய்திகள்

பண்பு..! – ராஜா செல்லமுத்து

Makkal Kural Official

கோபிக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு சம்பளம் உயர்த்தி இருந்தார் மேலாளர். அவன் வகித்த பதவியில் இருந்து இன்னும் கொஞ்சம் அதிகப்படியான அந்தஸ்தை கொடுத்தார் .கோபியை ஒரு ஊழியனாக இல்லாமல் ஒரு உறவினர் போலவே நடத்தி வந்தார் மேலாளர் .அது அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது.

” எப்படி கோபிக்கு மட்டும் எவ்வளவு சலுகை தரலாம்? நாமளும் தான் வேலை பார்க்கிறோம். ஆனா கோபிக்கு மட்டும் இவ்வளவு சலுகை ஏன் கொடுக்கிறார் மேலாளர்? ”

என்று ஊழியர்கள் எல்லாம் பேசிக் கொண்டார்கள். ஆனால் எது பற்றியும் கவலைப்படாத அந்த மேலாளர் கோபிக்கு வேண்டிய எல்லா சலுகைகளையும் கொடுப்பதில் கொஞ்சம் கூட தாமதம் செய்யவில்லை. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஊழியர்கள் ஒருமுறை, மேலாளரிடமே நேரடியாக கேட்டார்கள்.

“சார் வணக்கம். நாங்களும் இந்த நிறுவனத்தில் நாப்பது வருஷத்துக்கு மேல வேலை செஞ்சிட்டு இருக்கோம். ஆனா இப்போ வந்த கோபிக்கு நீங்க கொடுக்கிற மரியாதையை எங்களுக்கு கொடுக்க மாட்டேங்கிறீங்களே? அது எதுக்கு? அதுவும் எங்கள தாழ்த்திட்டு அவரை உயர்த்துறது மாதிரி இருக்கு. நீங்க செய்ற செயல் எங்களுக்கு அவமரியாதை செய்ற மாதிரி இருக்கு “

என்று ஊழியர்கள் எல்லாம் ஒரு சேர சொல்ல எதற்கும் பதில் சொல்லாமல் இருந்தார் மேலாளர்.

” சார் நாங்க ஏதும் தப்பா கேட்டமா? இது உங்களுடைய நிறுவனம் , நீங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனா அத நீங்க தனிப்பட்ட முறையில செஞ்சா பரவால்ல. இத்தனை பேர் வேலை பார்க்கிற இடத்துல கோபிக்கு மட்டும் நீங்க தனியா மரியாதை கொடுக்கிறதும் சலுகை செய்றதும் எங்களுக்கு பிடிக்கல. அது எங்களை குத்தி காட்டுற மாதிரி இருக்கு “

என்று சில சீனியர் ஊழியர்கள் சொல்வதைக் கேட்டு அப்போது தான் வாய் திறந்தார் மேலாளர்

” நீங்க சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, கோபி கிட்ட ஒரு பண்பு இருக்கு. பணிவு இருக்கு. இப்பதான் வேலைக்கு வந்தார். ஆனா, எந்த வேலை கொடுத்தாலும் அதச் சீக்கிரமா செய்றார். தான் படிச்சவன் அப்படிங்கிற மமதையோ , பந்தாவோ எதுவுமில்லை .அதையும் தாண்டி என் கூட அவர் உட்கார்ந்து பேசிட்டு இருக்கும்போது யாராவது என்னை பார்க்க வந்தா, உடனே எந்திரிச்சு நிப்பார். நான் அவரை எந்திரிச்சு நில்லுங்கன்னு சொன்னதில்ல.

வந்தவங்களும் இவர் ஏன் உட்கார்ந்திருக்கார்ன்னு கேட்கப் போறது இல்ல .ஆனா, இவர் என்ன பார்க்க வர்ற ஆளுகளுக்கு கூட மரியாதை கொடுக்கிறார். அப்புறம் அவங்க போன பிறகு, உட்காருறார். இத பலமுறை நான் கவனிச்சிருக்கிறேன் . இந்தப் பண்பு ரத்தத்திலே ஊறணும். பிறப்பிலேயே இருக்கணும் .அது கோபிக்கிட்ட இருக்கு . அது எனக்கு பிடிச்சு போச்சு. நீங்க கெட்டவங்க; நீங்க மரியாதை இல்லாதவங்கன்னு சொல்ல வரல. ஆனா வளர்ந்து வரக்கூடிய கோபி மாதிரி இளம் தலைமுறை இப்படி இருக்கிறது அபூர்வம். இதப் பாத்து அடுத்து வரக்கூடிய மனுசங்க சரியா இருப்பாங்க.

இப்ப எல்லாம் எங்க சார் மரியாதைங்கிறது மண்ணாங்கட்டி கூட கிடையாது. பெரியவங்கங்கிற ஒரு சின்ன உணர்வு கூட யார் கிட்டயும் இல்ல. கால் மேல கால் போட்டு உட்காருறாங்க. செல்போன்ல சத்தமா பேசுறாங்க. எதுவுமே யாரையும் மரியாதை கொடுக்கணும்ங்கிற எந்த லட்சணமும் இங்கேயாருக்கும் இல்லாத போது கோபி மாதிரி சில மனுசங்க இங்க இருக்கத்தான் செய்றாங்க. அவர் அலுவலகத்துக்கு ஒரு நாள் கூட லேட்டா வந்தது இல்ல . ஒரு நாள் கூட ஆபீஸ்க்குள்ள போன் பேசினது இல்ல.

அப்படியே பேசுனாலும் வெளியில போய் ஒரு வார்த்தை பேசிட்டு வந்துருவார். வேல நேரத்தில வேலய தவிர வேற எதுவும் பேச மாட்டாரு. இந்த மாதிரி ஆளுகளைத் தட்டி கொடுத்து முன்னுக்கு கொண்டு வந்தோம்னா நம்ம நிறுவனம் மட்டுமில்ல. இங்க இருக்கக்கூடிய எல்லாரும் உயர்ந்திடுவீங்க .இப்ப , ஏன் கோபிக்கு இந்த சலுகை கொடுத்தேன்னு நீங்க கேட்டீங்க இல்லையா? அவர் எப்படிப்பட்டவர் அப்படிங்கறத நான் உங்களுக்கு விளக்கிட்டேன் .அது மாதிரி இனி வரக்கூடிய தலைமுறையும் இங்க வேலை செய்ற ஊழியர்களும் இருந்தாங்கன்னா இந்த நிறுவனம் நல்லாவே வளரும் என்றார் மேலாளர்.

அவர் சொன்ன வார்த்தை சுருக் என்று குத்தியது ஊழியர்களுக்கு.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *