சென்னை, அக் 25
பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்த எஸ்.அன்பழகன் கடந்த 5.10.2022 அன்று நெல்லை அரசுப் பொருட்காட்சியில் பணியிலிருக்கும் போது மரணம் அடைந்தார்.
இதைத்தொடர்ந்து அவரது சகோதரர் குணாநிதி என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டு உள்ளது.இதேபோல, சென்னை ராஜாஜி மற்றும் காந்தி மண்டபத்தில் தோட்டப் பணியாளராகப் வேலைபார்த்து வந்த வரலட்சுமி என்பவர் கடந்த 4.1.2024 அன்று மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது மகன் பரமேஸ்வரராவ் என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் வேலை வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இவர்களுக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பணி நியமன ஆணையை வழங்கினார்.அப்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) மு.பெ.அன்புசோழன் மற்றும் கூடுதல் இயக்குநர் (செய்தி) செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.