புதுடெல்லி, பிப்.1–
தங்கம், வெள்ளி, வைரம் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்படுவதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக தங்கம், வெள்ளி பொருட்களின் விலை உயருகிறது. சிகரெட் விலையும் உயரும்.
2023–24ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அவர் உரையாற்றுகையில் கூறியதாவது:–
* தங்கம், வெள்ளி, வைரம், பித்தளை, சிகரெட் உள்ளிட்டவற்றின் இறக்குமதி வரி அதிகரிக்கப்படுகிறது.
* ஆய்வகங்களில் உருவாக்கப்பட்ட வைரம் மீதான சுங்க வரி குறைக்கப்படுகிறது.
* தொலைக்காட்சி பேனல்கள், செல்போன், கேமரா லென்ஸ் தயாரிப்பை ஊக்குவிக்க அதன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி 2.5 சதவீதமாக குறைப்பு.
* சிகரெட்டுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. புகையிலை பொருட்கள் மீதான வரி 16% வரை உயர்த்தப்படும்.
* மின்சார வாகன பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்திற்கு வரி விலக்கு மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்பு
* மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13% ஆக குறைப்பு
* பொம்மைகள், மிதிவண்டி, கார் மற்றும் பைக் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைகிறது.
* ரப்பர் மற்றும் ஆடைகளுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை புழக்கத்தில் இருந்து ஒழிக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* பொறியியல் துறையில் 5ஜி தொழில்நுட்பத்திற்காக 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்
* இயற்கை உரங்களை ஊக்குவிக்க “பிஎம் பிரணாம்” என்ற புதிய திட்டம் உருவாக்கப்படும்
நகர்ப்புற உட்கட்டமைப்புக்கு
ரூ.10 ஆயிரம் கோடி
*நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதிக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு
* ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.
* ரூ10,000 கோடி முதலீட்டில் பசு மற்றும் அதுசார்ந்த பொருளாதாரங்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
* நடப்பு நிதியாண்டின் திருத்தப்பட்ட நிதி பற்றாக்குறை, வளர்ச்சியில் 6.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தொடரும்