திண்டிவனம், ஜன.7-
திண்டிவனம்–புதுச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடியில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதியுடன், 36 அடி உயரத்தில் விஸ்வரூப மூர்த்தியாக பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி–சொர்க்க வாசல் திறப்பு வருகிற 10ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 9ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சீனிவாச பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
10ந்தேதி காலை 5 மணியளவில் சொர்க்கவாசல் நடை திறக்கப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளி, ஆச்சார்யன் மற்றும் ஆழ்வார்களுக்கு எதிர்சேவை கண்டருளும் வைபவம் நடைபெறுகிறது. அதன்பின்னர் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
விழா ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், உப தலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர் எஸ்.நரசிம்மன், டாக்டர் எம்.பழனியப்பன் மற்றும் அறங்காவலர் ஜி.செல்வம், கோதண்டம் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.