செய்திகள்

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஜூன் 28–-

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 800 சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது.

பக்ரீத் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. சொந்த ஊரில் கொண்டாடி மகிழ ஏதுவாக சென்னை உள்பட மாநிலம் முழுவதும் 800 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-–

பக்ரீத் மற்றும் தொடர் விடுமுறையையொட்டி இன்று (புதன்கிழமை) சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கக்கூடிய பஸ்களுடன் கூடுதலாக 400 சிறப்பு பஸ்களும், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பஸ்களும் ஆக மொத்தம் 800 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆகவே, தொலைதூரப் பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த சிறப்பு பஸ்கள் இயக்கத்தினை கண்காணித்திட அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள்.

எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்திக் கொண்டு தங்களது பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *