மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்லப்படுகிறது
திருநெல்வேலி, டிச. 22–
திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
தமிழக அரசு வழக்கறிஞர், ‘கேரளத்திலிருந்து லாரிகளில் கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவுகளை, கேரள அரசு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும்’ என தெரிவித்தார். ‘திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்’ என பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்தது.
இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்துள்ளனர். மருத்துவ கழிவுகள் 11 லாரிகளில் ஏற்றப்பட்டு மீண்டும் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் திருநெல்வேலி மாவட்டம் கல்லூர், சுத்தமல்லி பகுதியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை லாரிகளில் ஏற்றும் பணி நடந்து வருகிறது.
மூட்டை மூட்டையாக…
கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகளை மூட்டை மூட்டையாக லாரிகளில் கொண்டு வந்து நெல்லை அருகே நடுக்கல்லூர், கொண்டாநகரம், சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் கொட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சுத்தமல்லி போலீசாருக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக சுத்தமல்லி போலீசார் 6 வழக்குகளைபதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நெல்லையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கழிவுகளை கொண்டு வந்து கொட்டிய லாரியின் உரிமையாளர் மற்றும் கேரளாவைச் சேர்ந்த தனியார் கழிவு மேலாண்மை நிறுவனத்தின் சூப்பர்வைசர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே பசுமை தீர்ப்பாயம், மருத்துவ கழிவுகளை கேரள மாநில அரசே அப்புறப்படுத்த உத்தரவிட்டது. இதையடுத்து கேரளா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.
இந்த நிலையில் கேரளாவில் இருந்து வந்த 30 பேர் கொண்ட குழு தற்போது 6 குழுக்களாக பிரிந்து குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி நெல்லை பகுதியில் கொட்டப்பட்ட கேரள மருத்துவக் கழிவுகள், லாரிகளில் மீண்டும் ஏற்றப்பட்டு வருகின்றன.