செய்திகள்

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதி, அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்

Makkal Kural Official

மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி, ஜூலை 13-

நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ம் தேதி, அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அரசிதழில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்போது இருந்த மத்திய அரசு முற்றிலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது. இந்திய மக்கள், அத்துமீறல்களுக்கும், அராஜகங்களுக்கும் உட்படுத்தப்பட்டனர். அரசியல் சாசனம் மீதும், அதன் வலிமை மீதும் இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஆகவே, நெருக்கடி நிலை காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து போராடியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூன் 25ம் தேதியை ‘அரசியல் சாசன படுகொலை நாள்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் இத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தை எந்த விதத்திலும் ஆதரிக்க போவதில்லை என்று உறுதி பூணவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அப்பட்டமான சர்வாதிகார மனநிலையுடன் நெருக்கடி நிலையை அமல்படுத்தி ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்தார். எந்த தவறும் செய்யாத லட்சக்கணக்கானோர் சிறையில் தள்ளப்பட்டனர். ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது.

எனவே, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25ம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் மனிதத்தன்மையற்ற செயல்களை எதிர்கொண்ட அனைவரும் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை இந்த நாளில் நினைவுகூர்வோம்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடிய லட்சக்கணக்கானோருக்கு மரியாதை அளிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு இம்முடிவை எடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எதிர்ப்பு

இதற்கிடையே, அரசியல் சாசன படுகொலை தின அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் மோடி கபட நாடகத்துடன் தலைப்புச்செய்தியில் இடம் பிடிக்க மேற்கொள்ளும் மற்றொரு முயற்சிதான் அரசியல் சாசன படுகொலை தின அறிவிப்பு. பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அதனால் கடந்த ஜூன் 4ம் தேதி மக்கள் அவருக்கு தார்மீக தோல்வியை அளித்தனர்.

மோடி, அரசியல் சாசனத்தையும், அதன் தத்துவங்களையும் தாக்குதலுக்கு உள்ளாக்கினார். 1949-ம் ஆண்டிலேயே அரசியல் சாசனத்தை சங்பரிவார் நிராகரித்துவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *