சிறுகதை

நூதனச் செயல் – ராஜா செல்லமுத்து

யாருக்கு பணம் தேவைப்பட்டாலும் அவர்கள் கேட்காமலே உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவனாக இருந்தான் ஜெயக்குமார் .

இதனால் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஜெயக்குமாரைத் தேடி ஆட்கள் வர ஆரம்பித்தார்கள் .

பணமெல்லாம் பெரிய விஷயம் இல்லைங்க. மனிதர்கள் தான் முக்கியம் என்று இருக்கின்ற பணத்தை எல்லாம் அத்தனை பேருக்கும் வாரி வழங்கினான் ஜெயக்குமார்.

சிலர் திருப்பிக் கொடுப்பார்கள். சிலர் கொடுக்காமல் டிமிக்கி கொடுப்பார்கள் . தகுந்த நேரத்தில் உதவி செய்ததற்காக நன்றி சொல்வார்கள் .

ஆனால் சிலர் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்கப்போன் செய்தால் ஃபோன் எடுக்க மாட்டார்கள்.

என்ன இது? தக்க நேரத்தில் உதவி செய்ததற்கு தண்டனையா இது? யார் யாரிடமாே கேட்டுப் பார்த்தோம்; கிடைக்கவில்லை .எப்படியும் நீங்கள் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் வந்தோம் என்று அத்தனை பேரும் நம்மிடம் சொன்னார்களே. அதுவெல்லாம் பொய்யா ? இந்த மனிதர்களுக்கு பணம் வாங்கும் போது இருக்கும் கரிசனம் திருப்பி தரவேண்டியபோது இல்லாமல் போகிறதே.

பணம் கொடுத்து அது திரும்பி வராததால் நிறையப் பேரின் நட்பை நாம் இழந்து விட்டோம் .இனி யாருக்கும் பணம் கொடுக்கக் கூடாது .இதனால் நம்மைக் கெட்டவர்கள் என்று அவர்கள் தூற்றினாலும் பரவாயில்லை.

கடன் கொடுத்து அவர்களை விரோதிகள் ஆக்குவதை விட கடன் கொடுக்காமலேயே வேண்டாதவனாகி விடலாம் என்று முடிவு செய்தான் ஜெயக்குமார்.

அதன்படியே வாழவும் ஆரம்பித்தான்.

சார் வணக்கம் .உங்கள பத்தி கேள்விப்பட்டோம் .நீங்க நல்ல மனசுக்காரர். யார் கேட்டாலும் பணம் இல்லை அப்படின்னு சொல்லாம கொடுப்பீங்களாம்.

இப்ப எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது; தர முடியுமா? என்று ஒருவர் கேட்க

ஐயோ இல்லங்க இப்பதான் இருந்தது செலவாகி போச்சு என்று கொஞ்சம் ஈனக்குரலில் பேசினான்.

சார் என்ன ஆச்சு உடம்புக்கு முடியலையா? என்று எதிர் திசையில் இருந்தவன் கேட்டான்.

ஆமாங்க இப்ப கொஞ்சம் உடம்புக்கு முடியல. செலவாயிடுச்சு. கொஞ்ச நாள் கழிச்சு பேசுங்க என்று பதில் சொல்ல

என்ன சார் உடம்புக்கு வீட்டுக்கு பார்க்க வரலாமா? என்று எதிர் திசையில் இருப்பவர் சொன்னபோது

அடடா வேண்டாங்க. நான் இப்போ உங்களுக்கு போட்டோ அனுப்புறேன். பாருங்க என்ற ஜெயக்குமார். ஹாஸ்பிடலில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருக்கும் படத்தை அனுப்பினான்.

என்ன சார் நான் கூட காய்ச்சல் தலைவலி அப்படின்னு படுத்திருப்பீங்கன்னு நினைச்சேன்.

ஆனா குளுக்காேஸ் ஏற்றும் அளவுக்கு உடம்பு முடியலையா. பாத்துக்கோங்க சார் என்று எதிர் திசையில் இருப்பவன் போனைக் கட் செய்தான்.

ஆக ஒருத்தன்கிட்ட இருந்து தப்பிச்சோம் என்று பெருமூச்சு விட்டான் ஜெயக்குமார்

அடுத்து இரண்டு மணி நேரத்திற்கு எல்லாம் இன்னொருவன் கடன் கேட்டு போன் செய்திருந்தான்.

அவனுக்கும் அதே பதிலைச் சொல்லி அதே படத்தை அனுப்பினான் ஜெயக்குமார்.

அவனும் உண்மைதான் ஜெயக்குமாருக்கு உடம்பு முடியவில்லை போல என்று அவரும் பணம் கேட்பதை நிறுத்திக் கொண்டான் .

இது ரொம்ப நல்ல வழியா இருக்கே. இனிமேல் யாரு பணம் கேட்டாலும் இந்த போட்டோவையே அனுப்ப வேண்டியது தான் என்று முடிவு செய்தான் ஜெயக்குமார்

அதிலிருந்து யார் பணம் கேட்டாலும் குளூக்காேஸ் ஏறிக் கொண்டிருக்கும் படத்தை அனுப்பி வைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தான் ஜெயக்குமார்.

முதன்முதலாக பணம் கேட்பவனுக்கு அந்த குளுக்கோஸ் ஏறிய படம் விளங்காமல் இருந்தது .

இதையே ஒரு சாக்காக வைத்து அத்தனை பேருக்கும் பணம் கடன் கொடுப்பதை தவிர்த்தான் ஜெயக்குமார்

முதலில் பணம் கேட்டவனும் நான்கு மாதத்திற்கு பின்பு பணம் கேட்டவனும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டார்கள் .

ஜெயக்குமார் கிட்ட பணம் கேட்டேன். அவர் இல்லைன்னு சொல்லிட்டாரு. உடம்புக்கு முடியலை பாேல என்று கடைசியாக பணம் கேட்டவன் சொல்ல

ஆமா அப்படித்தான் எனக்கு ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி சொன்னாரு. போட்டோ கூட அனுப்பி இருந்தார் என்ற போது இதைக் கேட்டு திகைத்தவன் போட்டோ அனுப்பி இருந்தாரா? என்ன போட்டோ? என்று

அவன் கேட்டான்.

இதோ இந்த போட்டோ தான் என்று முதல் முதலாக பணம் கேட்டவன் படத்தை காட்டினான்.

இதே படத்த உங்களுக்கு மூணு மாசத்துக்கு முன்னாடி அனுப்பி இருக்காரு.அதே போட்டோவ தானே இன்னிக்கு எனக்கும் அனுப்பி இருக்கிறாரு.

அப்போ கடன் கேக்குறவங்ககிட்டே இருந்து தப்பிக்கிறதுக்காக பழைய போட்டோவை எல்லாத்துக்கும் அனுப்பி பரிதாபம் தேடிக்கொண்டிருக்கிறார் இந்த ஜெயக்குமார். பயங்கரமான ஆளா இருப்பார் போல

என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள் .

அன்று இவர்கள் இரண்டு பேரும் புதிதாக ஒருவனை ஜெயக்குமாரிடம் பணம் கேட்க வைத்தார்கள்.

அவனிடமும் ஈனக் குரலில் பேசிய ஜெயக்குமார் ரொம்ப உடம்பு முடியல. ஆஸ்பத்திரில இருக்கேன் உங்களுக்கு போட்டோ அனுப்புறேன் பாருங்க என்று அதே குளுக்கோஸ் ஏறிய பழைய படத்தை அனுப்ப இதைப் பார்த்த மூவரும் கொள்ளென்று சிரித்துக் கொண்டார்கள்.

அவர்களுக்குள்ளே பேசி முடிவெடுத்து பழமும் ஹார்லிக்ஸ் பாட்டிலும் வாங்கிக் கொண்டு ஜெயக்குமாரின் வீட்டுக்கு விரைந்தார்கள் .

ஏன் வீட்டுக்கு இத்தனை பேர் வராங்க? என்று அவர்களை வாசலிலேயே வழி மறித்தாள் ஜெயக்குமாரின் அம்மா.

ஏன் இவ்வளவு பேர் வந்திருக்கீங்க என்று ஜெயக்குமாரின் அம்மா கேட்டாள்.

ஜெயக்குமாருக்கு உடம்பு முடியலயாமே

என்ன ஜெயக்குமாருக்கு உடம்பு சரி இல்லையா? என்று சிறிது நேரம் யோசித்த ஜெயக்குமாரின் அம்மா

ஓ அதுவா அது உடம்பு சரியில்லாம இப்போ நல்லாயிட்டானே இதெல்லாம் வேண்டாம் எடுத்துட்டு போங்க என்று விரட்டினாள் அம்மா.

அப்போது வாக்கிங் போய்விட்டு குதிரை வேகத்தில் நடந்து வந்து கொண்டிருந்தான் ஜெயக்குமார்.

அத்தனை பேரையும் மொத்தமாக பார்த்த ஜெயக்குமாருக்கு உண்மையாகவே இப்போது தான் குளுக்கோஸ் ஏற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலை வந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *